Tuesday, June 26, 2007

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்

நான் கூறும் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் என்னும் திருதலத்தில் உள்ளது. இத்தலத்தில் தான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார். அவருக்கென இக்கோவிலில் தனி சந்நிதியொன்று உள்ளது. இங்குள்ள பெருமாள் தன் துணைவிகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கலோக கதவை
திறப்பார்கள். ஆனால் இக்கோவிலே பூலோகத்தின் வைகுண்டமாக கருதப்படுவரால் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு இக்கோவிலில் அடி எடுத்து வைத்தாலே சொர்க்க வாசலில் நுழைந்த முழு பலனைப் பெறலாம். இங்குள்ள தாயாரின் பெயர் யதிராஜவல்லி. தாயாருக்கென்று தனி சந்நிதியுள்ளது. அத்தோடு ஆண்டாளுக்கும் தனி சந்நிதி ஒன்று தனியாக உள்ளது. ஆண்டாளின் அழகை வர்னிக்க நம் அகக்கண் கூட பத்தாது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பிறகு ராமருக்கும், வேணுகோபாலருக்கும் தனித்தனி சந்ந்திகள் உள்ளன. இப்பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.


ஸ்தல வரலாறு; இக்காலத்தில் ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை
பார்த்து சிரித்தன. இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சாபமளித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவம் செய்தார்கள். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக, கணங்களுக்கு காட்சி அளித்து , பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார்.
அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.


தோஷம் நீங்கும் ஆலயத்தின் விசேஷம்; ராமானுஜர் என்பவர் ஆதிசேஷனின் மறுபிறவிகளில் ஒன்றாக பிறந்து பெருமாளின் உடனிருந்து, அவறை என்றுமே பிரியாதிருப்பவர். ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். அவரைப் பற்றி கூறிக் கொண்டிருந்தால் ஒரு கட்டுரையே பத்தாது. ஆக ஆதிசேஷணனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.


ராமானுஜரின் சிறப்பாக கொண்டாடப்படும் விஷயங்கள்; நான் குறிப்பிடும் இவையெல்லாமே இக்கோவிலில் வேலை பார்க்கும் ஒருவர் கூறியது; இந்த ஊரில் இறந்த ஒவ்வொருத்தருக்கும் மோட்சம் அடையக்கூடிய பாக்கியம் பெறுவர். எப்படியெனில் சுவாமிக்கு சூட்டப்பட்ட திருமாலையையும், ஆளவந்தார் காஷாயம், பரிவட்டம் ஆகியவையை இறந்தவரின் உடலில் வந்து சாத்துவார்கள். இதனால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென நம்பிக்கை.



ஸ்ரீராமானுஜருக்கு அபிஷேகம் நடக்கும் போது அவருக்கு சாத்திய உடைகள் ஈரமாகி விடும் அல்லவா. ஆகவே அந்த நீரை பிழிந்து தீர்த்தமாக நாம் அருந்தினால் அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.


நப்பிக்கையுடன் செய்தால் பலன் உறுதி.

4 comments:

துளசி கோபால் சொன்னார்

ராம அனுஜரைப் பத்திச் சொல்லிட்டீங்க. அப்படியே அந்த எட்டெழுத்தையும்
சொல்லி இருக்கலாமே.

ஓம் நமோ நாராயணா.

அன்புத்தோழி சொன்னார்

ஒரு தடவை என்னங்க நூறு தடவை ஓம் நமோ நாராயணா சொல்லலாம். ஞாபகம் படுத்திதுக்கு நன்றி திரு துளசி

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னார்

இந்தப் பதிவை எப்படி மிஸ் செய்தேன்! இன்றாச்சும் கண்டேனே, கண்ணுக்கினியரான உடையவர் எம்பெருமானார் இராமானுசரை!
நன்றி அன்புத்தோழீ!
இனி அடியேனுக்கு ஒரு மடல் தட்டி விடுங்க!

இதுவோ பெரும்பூதூர் இங்கு பிறந்தோ
ராமானுசர் எம் இடரைத் தீர்த்தார் என்ற வாசகத்துக்கு ஏற்றாற் போல பெரும்பூதூர் பதிவு இருக்கு!

//இங்குள்ள தாயாரின் பெயர் எதிராஜவல்லி//

யதிராஜ நாத வல்லி!
யதிராஜ = முனிக்கு எல்லாம் அரசரான ராமானுசர்
நாத = அவருக்கு நாதரானாதி கேசவப் பெருமாள்
வல்லி = அந்தப் பெருமாளின் வல்லி

//ஆளவந்தார் காஷாயம், பரிவட்டம் ஆகியவையை இறந்தவரின் உடலில் வந்து சாத்துவார்கள்//

இது சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் செய்யப்படுவது!
என்னே உடையவரின் பரங்கருணை!

அன்புத்தோழி சொன்னார்

//யதிராஜ நாத வல்லி!
யதிராஜ = முனிக்கு எல்லாம் அரசரான ராமானுசர்
நாத = அவருக்கு நாதரானாதி கேசவப் பெருமாள்
வல்லி = அந்தப் பெருமாளின் வல்லி//

மாற்றி விட்டேன் KRS. எடுத்துச் சொன்னதிற்கு நன்றி