Wednesday, June 13, 2007

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் 2

(தொடர்ச்சி)

இதன் முன் பாகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகள்;

அர்தநாரீஸ்வரராக உருவான வரலாறு; ஒரு நாள் அம்மன் விளையாட்டாக சிவனின் இரு கண்களையும் பொத்தினாள். இதனால் உலகமே இருண்டு போயிற்று. இச்செயலினால் கோபமடைந்த சிவபெருமான் அம்மனை பூலோகத்தில் சென்று தவம் செய்து தன்னை அடையும் படி கூறினார். கணவரின் சொல்படி பூலோகத்திற்கு சென்று அம்மன் தவம் செய்ய தொடங்கினாள். இந்த கதையை விரிவாக படிக்க இங்கே பார்க்கவும். பிறகு பதிதன்னின் சொல்படி மாங்காட்டிலிருந்து காஞ்சிக்கு அம்மன் புறப்பட்டு சென்றாள். பிறகு காஞ்சியில் சிவனின் உருவத்தை செய்து வேண்டி வந்தாள். இதனால் சிவபெருமான், திருவண்ணாமலைக்கு வந்து தன்னுடைய உடலில் சரிபாதையை பெருமாறு கூறினார். பிறகு அம்மன் திருவண்ணாமலைக்கு சென்று சிவனையெண்ணி தவம் செய்ய தொடங்கினாள். அப்பொழுது அத்தவத்தை கலைக்க மகிடாசூரன் அங்கே வந்தான். இதனால் அம்மன் மகிஷாசுரமர்தினியாக உருவெடுத்து அவனைக் கொன்றாள். அதன்பின்னர் கார்த்திகை மாதம் பௌர்னமி கூடிய சுப தினத்தில் பிரதோஷ வேளையில் ஜோதிரூபமான சிவனை தரிசித்துவிட்டு அம்மன் சிவனின் இடபாகத்தைப் பெற்றாள். அதனால் தான் கார்த்திகை தீபத்தின் போது அர்த்தனாரீஸ்வரர் ரூபமாக எழுந்தருளி சிவனும் அம்பாளுமாக சேர்ந்து எல்லோருக்கும் காட்சி கொடுக்கிறார்.

முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர்; அருணகிரிநாதர் தன் இளமை காலத்தில் வாழ்க்கையை வெருத்து வள்ளாள மகாராஜா கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கு தோன்றி அருணகிரிநாதரை காப்பாற்றி அவருக்கு அருள் புரிந்தார். பின்பு அவர் முருகப்பெருமானின் மீது அளவு கடந்த பக்தி
வைத்து பல பாடல்களை இயற்றினார். இதனால் இவர் மேல் பொறாமை கொண்ட அரசவைப்புலவரான சம்பந்தன் நீ அழைத்தால் உனது முருகன் வருகிறானா அல்லது நான் அழைத்தால் எனது காளி தேவி வருகிறாளா? என்று அகந்தையோடு பேசினான். பிறகு அருணகிரிநாதர் தன் நிலைமையை முருகனிடம் கூறி மன வேதனை அடைந்தார். இதனால் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சி தந்தருளினார். அகந்தையாக பேசியதால் காளி தேவி சம்பந்தனுக்கு காட்சி கொடுக்கவில்லை. இதனால் பெரும் கோபம் கொண்ட சம்பந்தன், அருணகிரிநாதனின் புகழை அழிக்க தக்க சமயத்திற்காக காத்திருந்தார். அதற்கு சமயமாக விஜயநகர் மன்னரான பிரபுவிட தேவராயர் தன்னுடைய கண் பார்வை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை தனக்கு சாதகமாகிக்கொள்ள சம்பந்தன், பிரபுவிட மன்னரைப் பார்த்து தங்களுக்கு கண் பார்வை கிடைக்க ஒரு வழி இருக்கிறது என்றார். அது என்னவென்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரைக் கொண்டு வைத்தியம் செய்தால் இழந்த கண்களை திரும்ப பெற முடியும் என்றும், ஆனால் இதை அருணகிரிநாதரால் தான் கொண்டு வர முடியும் என்றார். இதனால் மன்னரும் அருணகிரிநாதரிடம் தனக்கு இச்செயலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அருணகிரிநாதரும் அதற்கிணங்க தன்னுடைய பூத உடலோடு சொர்க்கத்திற்கு செல்ல முடியாததால் ஒரு இறந்த கிளியிடம் தன் உயிரை வைத்து கூடுவிட்டு கூடு பாய்ந்து சொர்க்கத்திற்கு சென்றார். ஆனால் சம்பந்தரின் சூழ்ச்சியால் அருணகிரினாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.

இதனால் அங்கு அருணகிரிநாதர் கிளிரூபத்திலேயே இருந்து முருகனின் பாடல்களை இயற்றினார். அங்கு கிளி வடிவமாக ஒரு கோபுரத்தில் அருணகிரிநாதர் தங்கியதால் அது கிளி கோபுரம் என்ற பெயரைப் பெற்றது.

வள்ளாள மகாராஜாவின் மகனான பரமசிவன்; வள்ளாள மகாராஜாவிற்கு தன் மேல் மிகவும் கர்வம் கொண்டு அருணாசலேசுவரர், தான் சொன்னால் அனைத்தையும் நிறை வேற்றுவார் என்ற நினைப்போடு வாழ்ந்து வந்தார். இதனால் இவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் அவருக்கு குழந்தையாக பிறந்தார். ஆனால் வள்ளாள மகாராஜா, தாம் எடுத்து அந்த குழந்தையை கொஞ்சும் போது சிவனாக பிறந்த அந்த குழந்தை மறைந்து விட்டது. மனம் கலங்கி சிவனை வந்து மகாராஜா வேண்டினார். இதனால் மகாராஜாவின் தவறை உணர்த்தி அவருக்கு மகனாக பிறந்ததால் தாமே அவருக்கு ஈமக்கிரியைகளை செய்துவிப்பதாக அருணாசலேசுவரர் வாக்களித்தார். இதனால் தான் இன்றும் மாசி மாதத்தில் வள்ளாள மகாராஜாவிற்கு அருணாசலேசுவரர் திதி செய்து வைக்கிறார். இதற்கு மாசி மகம் தீர்த்தவாரி என்று பெயர்.

மற்றொரு சம்பவம்; வள்ளாள மகாராஜா தன் பெயரில் ஒரு கோபுரத்தை கட்டி முடித்து விட்டு தன் பேரில் கர்வம் கொண்டார். இதனால் இவருக்கு புத்தி சொல்ல விரும்பிய சிவபெருமான் பத்து நாட்கள் தொடர்ந்து வரும் திருவிழாவில் ஒன்பது நாளும் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல மறுத்து விட்டார். இதனால் மனம் வருந்தி தன்
தவரை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் திருவிழாவின் கடைசி நாளில் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல சிவபெருமான் அனுமதித்தார்.

ரமண மகரிஷியின் பாதாள லிங்கம்; ஆயிரங்கால் மண்டபத்தில் படிகட்டின் வழியாக கீழே சென்றால் அங்கே நாம் பாதாள லிங்கத்தை பார்க்கலாம். அங்கே தான் ரமண மகரிஷி தன் இளமை காலத்தில் தங்கி சிவனையெண்ணி தவமிருந்தார். அவருக்கு உதவியாக சேஷாத்திரி என்பவர் உடனிருந்தார். மனதில் உள்ள ஆசைகளையும், எண்ணங்களையும் எப்படி அடக்க வேண்டும் என்று எளிமையான முறையில் கூறியது இவரது சிறப்பு. ஒரு எடுத்துக்காட்டாக...... ஒரு பெண் தன் விலையுயர்ந்த நகையை கழுத்தில் அணிந்துக் கொண்டே மற்ற எல்லா
இடங்களிலும் தேடியது, தன் பொருளின் மேல் தான் வைத்த பற்றை பற்றி எல்லோருக்கும் தெரியும் படி செய்தது போன்ற கதையில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

இவையே திருவண்ணாமலை ஸ்தலம் பற்றி நான் அறிந்ததும் கேட்டதும். உங்களுக்கு தெரிந்த வரலாறு கதை இருந்தால் தயவு செய்து கூறவும். நானும் தெரிந்துக் கொள்வேன்.

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னார்

சுருக்கமாகப் பல கதைகளை ஓரிடத்தில் திரட்டிக் கொடுத்து இருக்கீங்க அன்புத் தோழி! நன்றி.
அதுவும் வள்ளாள அரசருக்கு நடக்கும் மாசி மகத் தீர்த்தவாரி பற்றிச் சொன்னது அருமை!

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இதோ சில மேலதிக தகவல்கள்.

பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலம்.

உடல் சக்கரங்கள் தலங்களாய் இருக்கும் ஆறு ஆதாரத் தலங்களில், இது மணிபூரகச் சக்கரத் தலம்.

மாணிக்கவாசகர் திருவெம்பாவை எழுதியதும் இந்தத் தலத்தில் தான்!
இடைக்காட்டுச் சித்தரின் அவதாரத் தலமும் இதுவே!

விரூபாட்ச தேவர், குகை நமச்சிவாயர், அருணாசல தேசிகர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார் போன்ற ஞானியர் வாழ்ந்த தலம்.

வடுவூர் குமார் சொன்னார்

படித்துக்கொண்டு Scroll செய்யும் போது கடைசியாக ரமண மகரிஷி புகைப்படம் வந்தது ஏதோ அவரே நேரில் வந்தது போல் இருந்தது.அட்டகாசமான படம்.

அன்புத்தோழி சொன்னார்

வாழ்த்துக்கும், தகவல்களுக்கும் நன்றி திரு KRS.

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு குமார். எப்ப கோவிலுக்கு போகலாம்னு இருக்கீங்க.