Thursday, February 22, 2007

மாங்காடு "ஸ்ரீ காமாட்சி" ஸ்தல வறலாறு




ஒரு நாள் பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் கைலையில் மகிழ்ச்சியாக குலாவிக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது விளையாட்டாக பரமேஸ்வரி, பரமேஸ்வரனின் இரு கண்களையும் மூடினாள். இதனால் அண்ட சராசரமும் இருண்டு போயிற்று. ஆகையால் சிவன் மிகவும் கோவம் கொண்டு, பூமிக்கு செல்லும் படி சாபம் அளித்தார். பதிதனின் சொல்படி ஈஸ்வரியும் பூமியில் இருக்கும் மாங்காட்டில் வந்து தவம் செய்ய தொடங்கினாள். நாட்களும் நகர்ந்தன ஆனால் சிவனிடமிருந்து மன்னிப்பு கிடைக்கவில்லை. ஆகையால் ஈஸ்வரி, ஆம்ரா ரண்யத்தில் ( மாங்காட்டின் சிறப்புப் பெயர்) ஐங்குண்டம் வளர்த்து, அதன் நடுவில் இடக்காலின் பெருவிரல் அக்னியில் படும்படியும், வலக்காலை உயரத்திலும், ஒரு கையை தலை மேலும் மறு கையை நாபி மேலும், கண்களை மூடியும் கடுந்தவம் செய்யத் தொடங்கினாள். இதனால் மனம் மாறி சிவன், அம்பாளைக் காண வரும் சமயத்தில் பூமியில் வேறொறு முனிவர் சிவபெருமான் பூஜை செய்துக் கொண்டு இருந்தார். ஆகையால் பூஜையின் பிரியன் அவ்விடம் சென்று விட்டார். ஆனால் பூஜை தொடர்ந்துக் கொண்டே போக, ஈஸ்வரன் அசரீரி வாக்கினால் காஞ்சிக்கு வந்து மணப்பதாய் ஈஸ்வரியிடம் கூறினார். இதனால் மனம் மகிழ்ந்து அம்பாள் காஞ்சிக்கு சென்றாள். தவம் செய்த கோலத்தால் மாங்காட்டில் அம்பாளின் பெயர் தவக்காமாட்சி என்றானது. மணலில் சிவனின் உருவத்தைச் செய்து திருமணம் செய்ய அம்பாள் வேண்டினாள். நல்ல பங்குனி உத்திர நாளில் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணத்திற்காக செல்லும் போது, அக்னியை அணைக்க அம்பாள் மறந்து விட்டாள். இதனால் நிலங்கள் வறண்டது, பயிர்கள் சுருண்டது, பகுதியும் இருண்டது. ஆகையால் மக்கள் அனைவரும் குருமணியிடம் (ஆதி சங்கரர்) தம் குறைகளை சொல்லினார்கள். அதற்கு ஆதி சங்கரர் தம் ஞான திருஷ்டியில் உணர்ந்து, அஷ்ட கந்தமெனும் எட்டு மூலிகைகள் சேர்த்து "அர்த்தமேரு" ப்ரதிஷ்டை செய்தார். அதன் பெயர் "ஸ்ரீசக்கரம்". இதனால் அக்னி அழிந்து மாங்காடு சுபிக்ஷமானது. ஆனால் அம்பாளின் உக்கர கோலம் மட்டும் மாறாமல் இருந்ததால், மக்கள் செல்ல பயந்து கோயில் மட்டும் சான்னித்தியம் ஆகாமல் இருந்தது. பின்பு ஒரு நாள் ஆதி சங்கரர் அடிச் சுவட்டில் வந்த காஞ்சிப் பெரியவர் அங்கு வந்தார். தன்னுடைய ஞான திருஷ்டியில் நிலைமையை உணர்ந்திட்டப் பின் மூலத்தில் இருந்த தவக்கோல காமாட்சியை எடுத்து, சாந்த தேவியை ப்ரதிஷ்டைச் செய்தார். ஒரு கையில் கிளியோடும், மறுக்கையை கீழோடும் "ஆதி காமாட்சி" என்னும் பெயர் வைத்தார்.

அங்கு அம்பாளை ஆறு வாரம் வந்து தொழுதால் குறைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவற்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாதவற்களுக்கு தக்க வேலை கிடைக்கும். நாம் எந்த நாளில் செல்கிறோமோ அதே நாளில் தொடர்ந்து ஆறு வாரம் செல்ல வேண்டும். நாம் ஒவ்வொரு முறை செல்லும் போதும் இரண்டு எலுமிச்சை பழம் கோவிலில் கொடுக்க வேண்டும். அதற்கு அவற்கள் பூஜை செய்த ஒரு எலுமிச்சைப் பழம் கொடுப்பார்கள். நாம் அந்தப் பழத்தை அம்பாளாக பாவித்து தினமும் பூஜை செய்ய வேண்டும். பிறகு அடுத்த வாரம் செல்லும் போது பூஜை செய்த பழத்தோடு மூன்று பழமாக கோவிலில் கொடுக்க வேண்டும். இதேபோல் ஆறு வாரம் செய்து பின் கடைசி வாரம் ( ஆறு வாரங்கள் முடிந்தப் பின்) நன்றாக காய்ச்சியப் பாலில் ஏலக்காய் போட்டு கோவிலில் நெய்வேத்தியத்துக்காக் கொடுக்க வேண்டும். பிறகு தாமும் அறுந்தி, கோவிலில் உள்ள மற்றவற்களுக்கும் வினியோகம் செய்ய வேண்டும். பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக கைமேல் பலன் கிடைக்கும்.

நன்றி

அன்புத்தோழி

0 comments: