Friday, March 9, 2007

திருவேற்காடு கருமாரியம்மன்


நான் இன்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போவது திருவேற்காடு ஸ்தலத்தைப் பற்றி தான். அங்கிருக்கும் அம்மனின் பெயர் தேவி கருமாரியம்மன். இந்த ஆலயம் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு: ஒரு முறை அம்மன் கிழவி வேடம் பூண்டு, கதிரவனை சோதிக்க நினைத்தாள். ஆகையால் அம்மன் குறி சொல்லும் கிழவியாக வேடம் பூண்டு கதிரவனை சந்தித்தாள். ஆனால் சூரியன், அம்மனை அடையாளம் கண்டுக் கொள்ளாமல் அவமானப் படுத்தினான். இதனால் கோவம் கொண்ட அம்மன், சூரியனிடமிருந்து அகன்றாள். உடனே சூரியனின் ஒளி மங்கியது. தன்னுடைய தவறை உணர்ந்த சூரியன், அம்மனிடம் மன்னிப்பு கேட்டான். அம்மனும் சூரியனை மன்னித்து அருளினாள். பிறகு சூரியன், தன்னுடைய நாளான ஞாயிற்று கிழமையை அம்மனின் நாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அம்மனும் ஏற்றுக் கொண்டாள். அத்துடன் பங்குனி, புரட்டாசி மாதங்களில் கதிரவன் தன் கதிரால் அம்மனை அபிஷேகம் செய்யவும் வரம் கேட்டுப் பெற்றான்.

ஆகவே தான் பலர் ஞாயிற்று கிழமை கோவிலில் இரவு தங்குவதாக வேண்டிக் கொள்வார்கள். அந்த ஸ்தலத்தில் தங்கினால் அவ்வளவு புண்ணியம். இந்த சந்தர்ப்பம் எனக்கு அம்மனே தந்தருளினாள். ஒரு நாள் முதல் முறையாக அந்தக் கோவிலுக்குச் சென்றேன். 108 முறை ப்ராகாரத்தை சுற்றுவதாக நான் முன்னதாகவே வேண்டிக் கொண்டிருந்தேன். அதை நிறைவேற்றுவதற்காக கோவிலுக்கு சென்றேன். ஆனால் நான் சென்ற நேரம் மாலைப் பொழுதானதால் கூட்டம் இருந்தது. அது மட்டும் இல்லாமல் அன்று தங்கரத பவனி நடந்துக் கொண்டிருந்தது. அம்மனை தரிசித்து முடித்தப் பிறகு மணி சுமார் ஏழு இருக்கும். ப்ரகாரத்தை சுற்ற ஆரம்பித்தேன். நேரம் சென்று கொண்டே போனது, ஆனது ஆகட்டும் முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். கோவில் குருக்கள் கோவிலை சாத்துவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக பத்து மணி அளவில் சுற்றி முடித்தேன். பிறகு தான் கடைசி பேருந்து சென்றுவிட்டது என்ற விஷயம் தெரிந்தது. அந்த இடத்திற்கு நான் இதற்கு முன் சென்றது கூட இல்லை. பயம் தொற்றிக் கொண்டது. அதன் பின் கோவில் வாசலில் ஒரு பெண், எனக்கு சமாதானம் சொல்லி, அவர்கள் எல்லோரும் இரவு தங்குவதற்காக வந்துள்ளதாகவும் சொன்னாள். பிறகு என் வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கவலைப் படாமல் இருக்கும் படி சமாதானம் செய்தேன். அங்கேயே ஒரு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டு கோவில் வாசலில் இரவு தங்கினேன். அங்கு இரவு முழுவதும் பஜனை நடந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பஜனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சுமார் காலை நாலு மணிவரை பஜனை நடந்தது. பிறகு மறுபடியும், காலை முதல் தரிசனமாக அம்பாளை தரிசித்து செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அந்தக் கோவிலிற்கு சிரிது தூரத்தில் சிவன் கோவில் உள்ளது. அங்கு அகஸ்த்தியருக்கு கல்யானக் கோலத்தில் சிவனும், அம்பாளும் தரிசனம் தருகிறார்கள்.
ஏனென்றால், ஒரு தடவை சிவனுக்கும், அம்மனுக்கும் திருமணம் ஆகும் போது எல்லோரும் ஒரு இடம் வந்துவிடவே, உலகம் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது. இதனால் சிவன் அகஸ்த்தியரை மட்டும் வேறு இடத்தில் இருக்குமாறு செய்தார். இதனால் அகஸ்த்தியர் திருமணத்தை பார்க்க முடியாமல் போனதே என்று கவலைப் பட்டார். அதற்காக அவருடைய இடத்திற்கே வந்து திருமணக் கோலத்தில் சிவன் காட்சிக் கொடுத்தார். இந்தக் கோவிலில் வேதம் நிறைந்த மரம் ஒன்று இருக்கிறது, அதனால் தான் இந்த ஸ்தலத்திற்கு வேற்காடு என்ற பெயர் வந்தது. இந்தக் கோவிலுக்கு மிக அருகில் வேரொரு கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனைத் தான் வேரொரு இடத்தில் ப்ரதிட்ஷ்ட்டை செய்ததாக ஐதீகம். அந்த ப்ரதிட்ஷ்ட்டை செய்த அம்மன் கோவில் தான் இப்பொழுது எல்லோரும் செல்லும் கருமாரி அம்மன் ஆலயம். ஆகவே இந்த மூன்று கோவிலுக்கும் சேர்ந்து சென்றால் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும். உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.

2 comments:

Anonymous சொன்னார்

Dear Ambu Tholizhi,,

I read this blog while i am in very high stress due to High debt.

The blog is very usefull to me and beautifully designed.

God Bless You... and with You always.... muralie, coimbatore

அன்புத்தோழி சொன்னார்

Thank you Mr. Murali