Monday, October 22, 2007

மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் பாகம் 2

{தொடர்ச்சி}


இதன் முந்தய பதிவை பார்க்க இங்கே பார்க்கவும்.


பொற்றாமரை குளம்; இக்குளத்தை சிவபெருமான், நந்தி தேவர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, தன் சூலத்தால் புமியில் குத்தி தண்ணீரை வரவழைத்தார். இக்குளத்தில் உள்ள தாமரையைத் தான் இந்திரன் தன் பூஜைக்கு உபயோகப் படுத்தினார். இத்தீர்த்திற்கு ஆதி தீர்த்தம், சிவகங்கை மற்றும் உத்தம தீர்த்தம் என்னும் பல பெயர்கள் உள்ளது. இத்தீர்த்தம் முதன் முதலில் வந்ததால் ஆதி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. அது போல், ஞானத்தை அளிக்கும் தீர்த்தம் ஆனதால் ஞான தீர்த்தம் என்றும், பரம தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. அது போல் இக்குளத்தில் குளித்தால் முக்தி தரும் தீர்த்தமாதலால், முக்தி தீர்த்தம் என்ற பெயரும் பெற்றது. முன்னொரு காலத்தில் இக்குளத்தில் ஒரு கொக்கு தவம் செய்தது. அப்பொழுது, அங்கிருக்கும் மீன்கள் அத்தவத்தை கலைக்க முற்பட்டது. இதனால், தவம் முடிந்து வரம் கேட்கும் நேரத்தில், இங்கு எந்த மீன்களும் வசிக்கக்கூடாது என்ற வரத்தையும் கொக்கு வாங்கிக் கொண்டதால், இக்குளத்தில் இன்றும் எந்த மீன்களும் வசிப்பதில்லை. இக்குளத்தில் தான் சங்கப் பலகை மிதக்க விட்டு எந்த பாட்டுகளும், கவிதைகளும் இலக்கியத்திற்கு ஏற்றவை என்று சோதனை செய்யப்படும். அப்படி அவை ஏற்றவை அல்லாதவையாக இருந்தால், அந்த கவிதைகள் தண்ணீரில் மூழ்கி விடும். மற்றவை கரையில் சேர்க்கப் படும். அப்படி சோதித்து தேற்வு பெற்றதில் திருக்குறளும் ஒன்று.

கோபுரங்கள்; கோபுரங்களுக்கு பிரசித்தி வாய்ந்த கோவில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. மொத்தம் 14 கோபுரங்கள் இக்கோவிலில் உள்ளது. அவைகளுள் ஒன்பது அடுக்கு ராஜகோபுரங்கள் நான்கு உள்ளன. இந்த ராஜகோபுரங்கள் கோவிலின் நான்கு திசைகளிலும் உள்ளது. அதன் பெயர்கள் கிழக்கு ராஜ கோபுரம், மேற்கு ராஜ கோபுரம், தெற்கு ராஜ கோபுரம் மற்றும் வடக்கு ராஜ கோபுரம் ஆகும். பிறகு ஏழு அடக்கு சித்திரை கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரத்தை அம்மன் சந்நிதி கோபுரம் என்றும் சொல்லலாம். இக்கோபுரத்தில் பல சிற்பங்கள் உள்ளதால் இதற்கு சித்திரக் கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்தது ஐந்து அடுக்கு கோபுரங்கள் ஐந்து உள்ளன. அவை கோபுர நாயக கோபுரம் அல்லது சுவாமி சந்நிதி கோபுரம், முக்குருணி வினாயகர் கோபுரம் அல்லது நடுகாட்டு அல்லது இடைக்காட்டு கோபுரம், சின்ன மொட்டை கோபுரம், கடஹ கோபுரம் மற்றும் மர கோபுரம் உள்ளன. அடுத்து மூன்று அடுக்கு கோபுரம் இரண்டு உள்ளன. அவை அம்மன் சந்நிதி கோபுரம் மற்றும் சுவாமி சந்நிதிகள் ஆகும். பிறகு கடைசியாக இரண்டு தங்க கோபுரங்கள் உள்ளன. அவை இந்திர விமானம் கொண்ட சுவாமி சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதியில் உள்ளது. சுவாமி சந்நிதியில் உள்ள தங்க கோபுரத்தில் எட்டு யானைகளும், முப்பத்தி இரண்டு சிங்களுகளும், அறுபத்தி நான்கு சிவகணங்களும் இக்கோபுரத்தை தாங்குவது போல் காட்சி அளிக்கும். இது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். ஆக இந்த பதிநான்கு கோபுரங்களும் இக்கோவிலில் சுற்றி அமைந்து கோவிலின் வெளி தோற்றம் மிகவும் அகலமாகவும், அழகாகவும் காட்சி அளிக்கும்.

மண்டபங்கள்; கொலு மண்டபம், கிளிகூண்டு அல்லது சங்கிலி மண்டபம் அல்லது யாழி மண்டபம், இருட்டு மண்டபம் அல்லது முத்துப்பிள்ளை மண்டபம், ஆறுகால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், வெள்ளியம்பல மண்டபம், அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நால்வர் மண்டபம் (அப்பர், சுந்தர ர், மாணிக்கவாசகர் மற்றும் திருதாவுக்கரசர்), மீனாட்சி நாயகர் மண்டபம், சுவாமி சந்நிதி கருவரை மண்டபம் சுவரொற்றி தக்ஷிணாமூர்த்தி மண்டபம், துர்கை மண்டபம் மற்றும் லிங்கோதுபவர் மண்டம்ப் உள்ளது. அது தவிர நூரு கால் மண்டபம் அல்லது மண்டப நாயக மண்டபம், கல்யாண மண்டபம், நகரா மண்டபம், புது மண்டபம், முத்துராமையர் மண்டபம், பேச்சியக்காள் மண்டபம், நந்தி மண்டபம், மங்கயர்க்கரசி மண்டபம், தேரடி மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் மற்றும் பழைய ஊஞ்சல் மண்டபம் என்று பல மண்டபங்கள் உள்ளன.

அஷ்டசக்தி மண்டபம்; இந்த மண்டபத்தை திருமலை நாயகரின் மனைவிகள் கட்டினார்கள். இந்த மண்டபத்தில் எட்டு சக்திகளான கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி,ஞானரூபிணி, மகாலக்ஷ்மி,மகேஷ்வரி, ஷாமளா மற்றும் மணோண்மணியின் சிலைகள் இருக்கும்.

முத்துராமையர் மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி விக்ரகங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் தான் அன்னதானம் நடக்கும்.

தேரடி மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் மீனாக்ஷி அம்மனையும் மற்றும் சுந்தரேஸ்வரரையும் அமர்த்தி பின் ஊர்வலம் வருவார்கள். புது ஊஞ்சல் மண்டபம்; இந்த புது ஊஞ்சல் மண்டபத்தில் தான் அம்பாளையும் சிவனையும் அமர்த்தி ஊஞ்சலாட்டும் வைபோகம் நடக்கும்.

கொலு மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் நவராத்திரி நேரத்தில் பல விதமான கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து கொண்டாடுவார்கள்.
இன்னும் இந்த கோவிலின் அழகையும் அமைப்பையும் சொல்லச்சொல்ல முடியாத ஒன்று. நீங்களே நேரில் சென்று கண்டு களிங்கயேன்.
இந்த மீனாட்சி அம்மனின் பாடலை கேட்டு மகிழ இங்கே பார்க்கவும்.இந்த பாட்டின் வரிகளை படிக்க என் முந்தய பதிவிலுள்ளதை பார்க்க இங்கே பார்க்கவும்.

Wednesday, October 17, 2007

மீனாட்சி அம்மன் திருக்கோவில்- பாகம் 1

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் ஆலயம் மீனாட்சி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயம் மதுரை மாநகரத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் சுந்ததேஸ்வரர். இன்னும் இவருக்கு மற்ற பெயர்களும் உள்ளது. அவற்றில் ஒரு சில பெயர்களை குறிப்பிடுகிறேன். சோமசுந்தரர், கல்யாண சுந்தரர், சொக்கநாதர், கடம்பவனேஸ்வரர். இன்னும் பல உள்ளன. அதுபோல் அம்மனின் பெயர் மீனாட்சி. மற்ற பெயர்கள் அங்கயர்க்கண்ணி, மரகதவல்லி, கோமகள், அபிராமவல்லி, சுந்தரவல்லி இன்னும் பல. ஒரு சில இடங்களில் சிவனுக்கு சக்தி அதிகம், அது போல் ஒரு சில இடங்களில் அம்மனுக்கு சக்தி அதிகம். அப்படி பார்த்தால் மதுரை, மீனாட்சி அம்மனின் ஆட்சியில் தான் நடக்கிறது. நாம் கூட கிண்டலுக்கு கேட்போம் என்ன உங்கள் வீட்டில் மீனாட்சியா, சிதம்பரமா. இந்த கேள்விக்கு அர்த்தம், வீட்டில் பெண்ணின் ஆட்சியா இல்லை ஆணின் ஆட்சியா. இது கிண்டலுக்காக கேட்பது. மீனாட்சி= மீன்+ஆட்சி. மதுரை மீனாட்சி தன் மீன் போன்ற கண்களினால், அந்த இடத்தையே ஆட்சி புரிகிறாள். இதற்கு புராணத்தில் கதை உள்ளது.




ஸ்தல வரலாறு; பாண்டிய வம்சத்தில் வந்த மலயத்துவஜர் என்னும் அரசனுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இதனால் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென ஒரு வேள்வி நடத்தினார். இந்த வேள்வியின் முடிவில் ஒரு பெண் குழந்தை அந்த ஓமகுண்டத்திலிருந்து தோன்றியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அம்மன்னன் அந்த குழந்தைக்கு அங்கயற்கண்ணி என்றும் மீனாட்சி என்றும் பெயர் சூட்டினார். ஆனால் அந்த குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தது. இதனால் அம்மன்னன் மிகவும் வருத்தமடைந்தான். அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் வந்து, '' எப்பொழுது உன் மகள், தன் மனதிற்கு பிடித்த மணாளனை காண்கிறாளோ அப்பொழுதே அந்த மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்'' என்றது. இதனால் மனம் திருப்தி அடைந்த அம்மன்னன், தன் பெண்ணை மிகவும் தைரியசாலியாக வளர்த்தார். வெகு விரைவிலேயே மன்னனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மீனாட்சியை அரசியாக முடிசூட்டினார்கள். மீனாட்சியும், தன் வலிமையால் மற்ற அரசர்களை வெற்றி கொண்டாள். இப்படி ஒரு நாள், கைலாயத்தில் போர் நிகழும் போது, மீனாட்சி தன் மணாளனான சிவபெருமானை காண்கிறாள். அந்த நேரத்தில் அவளுடைய மூன்றாவது மார்பகம் மறையவே, இவர் தான் தான் மணக்கப்போகும் மனாளன் என்பதை உணர்ந்து சிவபெருமானிடம் போரிடாமல், நாணத்தால் தன் தலை குணிந்தாள். இதன் பிறகு மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தேறியது. பின்னர் சிவபெருமான் ஆட்சி புரிந்து பின்னர் உக்கிர பாண்டியன் என்னும் மகனை மதுரைக்கு முடிசூட்டிவிட்டு, சிவனும் அம்பாளும் கைலைக்கு செல்கிறார்கள். ஆனாலும் இன்று வரை அந்த மீனாட்சி அம்மனே மதுரையை ஆட்சி புரிந்து, மக்களை வாழ்த்துகிறார்.

இன்னும் சிவபெருமானுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு நாள் இந்திரன் பூலோகத்திற்கு வந்தான். அப்பொழுது கடம்பவனத்தில் சிவலிங்கம் ஒன்றை கண்டார். அந்த சிவலிங்கத்தை வணங்கி பின் அதை கொண்டுவந்து மதுரையில் பிரதிஷடை செய்தான். பின் அந்த கோயிலை எடுத்து பெரிதாக கட்டியது குலசேகர பாண்டியன் என்னும் மன்னன். நாம் இந்திரன் பிரதிஷ்டை செய்ததிற்கு ஆதாரமாக அங்கு இந்திர வாகனத்தை பார்க்கலாம். நடுவில் பல வேற்று மத அரசினரால் ஆட்சி செய்யப் பட்டதினால், இவ்வாலத்தில் பல சிற்பங்கள் சீர் குலைந்து போனது. பின் இத்திரு ஆலயத்தை திருமலை நாயக்கர் என்னும் அரசர், பல வேலை பாடுகள் செய்து, மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு உருவாக்கினார்.

(தொடரும்)

Tuesday, September 25, 2007

குழந்தைக்கு சொல்லித் தரும் பாப்பா பாட்டு

ஒரு குழந்தையை நல்ல குணங்களுடனும், அவர்கள் மனமும் நோகாமாலும் பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்க, நாம் சின்ன வயதிலேயே அவர்களுக்கு நல்ல புத்திமதி கூறும் பாட்டுகளையும், கதைகளையும் சொல்லி வந்தால், அது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து, பிற்காலத்தில் தவறு செய்ய யோசிப்பார்கள். ஒரு குழந்தை நன்றாக வளர்வதும், வளராததும் அது அவர்கள் பெற்றோரை பொருத்து தான் உள்ளது. அப்படி நாம் குழந்தைக்காக பாடும் பாட்டுகளில், பாரதியாரின் பாப்பா பாட்டு, மிகவும் சிறந்தது. இந்த பாட்டை பாட்டினால், எப்படி தன்னொத்தோடு வளர வேண்டும், பிறரிடம் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும், தேசப் பற்றும், மொழிப் பற்றும் வளர்த்துக் கொள்ள வேண்டும், விலங்குகள் நமக்கு நண்பன் போன்ற நல்ல கருத்துகளை வளர்க்கும். இதோ பாரதியாரின் பாப்பா பாட்டு;;

ஓடி விளையாடு பாப்பா! -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. (1)

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! (2)

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதை
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேனும் பாப்பா! (3)

பாலைப் பொழிந்து தரும் பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா! (4)

வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! (5)

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு தரும் நல்ல பாட்டு,
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா! (6)

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா! (7)

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! (8)

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! (9)

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! (10)

தமிழ்மத்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! (11)

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதை
தாயென்று கும்பிடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் -அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! (12)

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! (13)

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு;
சேதமில் லாதஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா. (14)

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். (15)

உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா! (16)

Monday, September 24, 2007

குழந்தைக்கு பொடி இதோ

நம்ப நாட்டில் உள்ள பல இயற்கையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு இடைத்தது ஒரு வரப்பிரசாதம். இதை நிறைய பேர் கவனிக்காமல் சீரீயல்ஸ்ல (artificial cereals) தான் சக்தி இருக்குனு நினைத்து, நிறைய வாங்கி கொடுக்கறாங்க. அதே போல ஜீஸ், நம்ம கையால ஆப்பில், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுக்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல பேர் கடையில் கிடைக்கும் ஜீஸ் பாட்டிலை வாங்கி அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் உடம்பில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் தான் சேர்கிறது. நாமும் இயற்கையோடு ஒன்றி, இயற்கை உணவுகளை கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல சத்துக்கள் உடம்பில் சேரும்.

இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், மாகி நூடுல்ஸ் (magie noodles) இதிலுள்ள ரசாயன கலப்பு உடம்பிற்கு மிகவும் கெட்டது. ஆனால் முக்கால்வாசி வீட்டில் இது தான் குழந்தைகளுக்கு மாலை உணவு. இது பிற்காலத்தில் அவர்கள் உடம்பை மிகவும் பாதிக்கும். அதற்காக அவர்களுக்கு வெளி உணவே கொடுக்காதீர்கள், என நான் சொல்லவில்லை. அதையும் கொடுங்கள், இயற்கை உணவுகளை அதிகம் கொடுங்கள் என்று தான் சொல்கிறேன்.

இந்த இயற்கையான சத்துமாவு கஞ்சியை குழந்தைகளுக்கு வீட்டில் செய்து தினமும் கொடுத்தால், அது அவர்கள் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கஞ்சிப்பொடி செய்யும் முறை;

சம்பா கோதுமை -- 200 கிராம்
ஜவ்வரிசி -- 100 கிராம்
கம்பு -- 100 கிராம்
கேழ்வரகு -- 100 கிராம்
பார்லி -- 100 கிராம்
பாசிப்பருப்பு -- 100 கிராம்
பாதாம், முந்திரி -- 100 கிராம் (இரண்டும் சேர்த்து)
புழுங்கலரிசி -- 200 கிராம்
பொட்டுக்கடலை --100 கிராம்
ஏலக்காய் -- 4 எண்ணிக்கை.

புழுங்கலரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு இவற்றை சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி துணியில் உலர்த்தி, அதை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். ஆனால் முந்திரி, பாதாம் இவற்றை லேசாக வறுத்தால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள சாமான்களில் பார்லியையும், பொட்டுக்கடலையையும் வறுக்க வேண்டாம். இவை அத்தனையையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக திரித்து வைத்துக்கொள்ளவும். இவை அனைத்துமே எல்லா இடத்திலும் கிடைக்கும். ஒரு வேளை கம்பு, கேழ்வரகு இவை கிடைக்கவில்லை என்றால் அது இல்லாமலும் செய்யலாம். அதே போல் இந்த கஞ்சியை பாலோடு சேர்த்து வேக வைத்து கொடுத்தால், உடம்பில் பால் சத்தும் இதனுடன் சேரும்.

இவ்வளவே தாங்க, நீங்களும் உங்க குழந்தைக்கு பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?

குறிப்பு; இதில் நான் ஏதாவது சொல்ல மறந்திருநால் தயவு செய்து குறிப்பிடவும்.

ஆயர்பாடி மாளிகையில்

நான் தாலாட்டு பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை எஸ் பி பி பாட இன்று முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமையாக இருக்கும். இப்பாடலை கேட்க இங்கே அழுத்தவும்.

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணனை உண்டு
மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவளுரங்க
மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அந்த மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் பொன்னழகை பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

Monday, September 10, 2007

காளிகாம்பாள் திருக்கோவில்

இத்திருக்கோவில் சென்னையில் பாரீஸ் தம்பு செட்டிதெருவில் அமைந்துள்ளது. அம்பாளின் பெயர் காளிகாம்பாள், சிவனின் பெயர் கமடேஸ்வரர். முதன் முதலில் இத்திருத்தலம் சென்னைக்குப்பம் என்னும் பகுதியில், பண்டைக் கால ஆங்கிலேயர் ஆட்சியில் கிபி 1640 யில் ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் கட்டப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்களின் கோரிக்கையின் பேரில் தம்பு செட்டி தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.பின்னர் இத்திலுகோவில் விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

இத்திருத்தலம் காஞ்சிபுரத்திற்கு ஈசான்யமாகவும், திருமயிலைக்கு வடக்கிலும், திருவொற்றியூருக்கு தெர்க்கிலும்,மற்றும் திருவேற்க்காட்டிற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தினை வியாசர், அகத்தியர், பராசரர், பிருங்கி மகரிஷி போன்ற பல முனிவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். மற்றும் இந்திரன்,வருணன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் முதலானோரும் இத்திருதலத்தை வழிபட்டுள்ளார்கள். மற்றும் குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம்அதிகரித்தது என்ற செய்திகளும் உண்டு.

இன்னும் சத்ரபதி சிவாஜி அவர்களும் காளிகாம்பாளை வழிபட்ட பிறகே தனக்குமுடிசூட்டிக் கொண்டார் என்ற வரலாறு செய்திகளும் உண்டு.

இவ்வாலயத்தின் ஸ்தல விருக்ஷம் மாமரம். அம்மனின் பிகாரத்தை சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சித்தி புத்தியுடன்வினாயகர், ஸ்ரீ கமடேஸ்வரர், துர்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, வீரபத்ர மாகாளி,ஸ்ரீ நாகேந்திரர், காயத்ரி, விஸ்வகர்மா,நடராகஜர், இன்னும் நிறைய சந்நிதிகள் உள்ளன.

இவ்வாலயத்திலும், ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை காணலாம்.இங்கு அருள் பாலிக்கும் காளிகாம்பாள் மற்ற சக்தியை விட பல மடங்கு சக்திவாய்ந்ததாகும். இன்னும் சொல்லப் போனால் காஞ்சி காமாட்சியே, காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும். அம்பாள் அமர்ந்திருக்கும் காட்சியானது கைகளில் அங்குசம், பாசமும்,நீலோத்ப மலரை தாங்கிய வண்ணமுமாகவும், பின் இடக்கையில் வரத முத்திரை தரித்தநிலையிலும், தன் ஒரு காலை மடித்தும்வலது காலை தாமரையின் மேல் வைத்துபத்மாசன நிலையில் காட்சி தருகிறாள்.இத்திருக்காட்சியைப் பார்க்க கண் கோடிவேண்டும். ஆக நீங்களும் வந்து அம்மனை தரிசித்து அருள் பெருங்களேன்

Thursday, September 6, 2007

புகைப்பட போட்டிக்கு

என் வீட்டு தெருவில், விளையாட்டு மைதானம் பார்,
என் வீட்டு குழந்தை, விளையாடும் பொம்மை பார்,
என் வீட்டு குழந்தை, தூக்கி எறியும் பிளாக்ஸை பார்,
பல வண்ணங்களை காண்பிக்குமே.

இதுவே நான் பங்கு பெரும் முதல் படப் போட்டி. எல்லோரும் போடும் படங்களை பார்த்தவுடன் எனக்கும் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதன் விளைவு தான் இது. என்ன எடுக்கலாம் என்று யோசிக்கும் போது, குழந்தையின் பொம்மைகள் கண்ணில் பட்டன.
அப்படியே விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் வண்ண செங்கல் எல்லாம் கண்ணில் பட அத்தனையும் எடுத்தாகி விட்டது. இதோ என் படங்கள்.












Posted by Picasa

Thursday, August 9, 2007

என்ன குழந்தை தூங்கலையா?

குழந்தையை தூங்க வைப்பது என்பது ஒரு கலை. அப்படி நாம் தேர்ந்தெடுக்கும் வழிகளில் தாலாட்டு பாட்டும் ஒன்று. நாம் எவ்வளவு தான் கூச்ச சுபாவமாக இருந்தாலும், குழந்தைக்கு என்று வரும் போது எல்லாம் எங்கோ பறந்து போய் விடுகிறது. கள்ளங்கபட மில்லா குழந்தை முகத்தை பார்க்கும் போது, யாருமே கண்டிப்பாக கொஞ்ச ஆரம்பித்து விடுவார்கள். அப்படி பட்ட அந்த குழந்தையை தூங்க வைக்க நாம், நமக்கு தெரிந்ததை தாலாட்டாக பாடிக்கொண்டே அதன் கன்னத்தை வருடி விட்டால், அது சுகமாக அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிடும். நான் எப்பொழுதுமே என் குழந்தையை தூங்க வைக்க பாடும் பாட்டு இது தான். குழந்தையை தூங்க வைத்துக் கொண்டே கடவுள் பெயர்களை கொண்ட இப்பாட்டை பாடிய புண்ணியமும் கிடைக்கும், குழந்தைகளுக்கும் கடவுளின் பெயர்கள் தெரிய வரும். இது எப்படி இருக்கு....


இந்த பாடலை சுசீலா அழகாக பாடியிருப்பார்கள். படம் சிப்பிக்குள் முத்து. பாட்டை கேட்க இங்கே சொடுக்கவும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன் (ஒரு வேளை mozilla வில் பாடவில்லையென்றால் Internet Explorer ரில் போட்டு கேளுங்கள்)

லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குரும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த)

ஆரீராரோ ஆரீராரோ, ஆரீராரோ ஆரீராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
எதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
எதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (வரம் தந்த)

ஆரீராரோ ஆரீராரோ, ஆரீராரோ ஆரீராரோ

ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் காணும் அந்த கம்ப நாதன் நானே
ஸ்ரீராமன் காணும் அந்த கம்ப நாதன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகையர் நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)

ஆரீராரீ ராரீராரோ, ஆரீராரீ ராரீராரோ

ஸ்ரீ சத்ய நாராயணர்

இந்த வாரம் எதை எழுதலாம் என்று யோசித்த பொழுது சட்டென்று ஸ்ரீ சத்ய நாராயண பூஜை ஞாபகம் வந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று பௌர்னமி. இந்த பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்னமியன்றும் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் பௌர்னமியன்று மாலைப் பொழுதில், சந்த்ரோதய காலத்தில் பூஜையைச் செய்வது மிகவும் உசிதம். ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.

இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ சத்யநாராயணரே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார். இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் அனூகூலமாக உள்ளதோ அப்பொழுதும் செய்யலாம்.

இந்த பூஜையை பொது இடங்களிலோ அல்லது வீட்டிலோ தமது சௌகர்யம் போல் செய்துக் கொள்ளலாம். ஆனால் பூஜை செய்யும் முன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தை துடைத்து கோலமிட்டு, அதன் மேல் மணை வைத்து அதில் சுவாமி படத்தை வைத்து பூஜையை தொடங்க வேண்டும். பின் படத்திற்கு முன் கலசத்தை ஒரு நூலில் சுற்றி, அதில் வஸ்திரமோ அல்லது பூவோ வைத்து சுற்றி வைத்து, அந்த கலசத்தில் சுத்தமான நீரை பரப்பி அதில் சிறிது ஏலக்காய் போட்டு அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.

பின் இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைக்க வேண்டும். அந்தந்த தெய்வத்தை ஆவாகனம் செய்ய சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை வேலைக்கு செல்வதால் நேரம் குறைவாக இருந்தால் கணபதி பூஜையும், ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் மட்டுமாவது செய்ய வேண்டும். இவை இரண்டும் மட்டும் செய்ய நவதானியங்கள் தேவையில்லை. மற்றபடி கணமதிக்கு பாலோ, வெல்லமோ அல்லது பழமோ நிவேதனம் செய்யலாம். அதுபோல் ஸ்ரீ சத்ய நாராயணருக்கு ரவை கேசரியோ அல்லது கோதுமை மாவை சிறிது நெய்யில் வருத்து பின் சர்க்கரை சேர்த்து நிவேதனம் செய்யலாம்.

இந்த பூஜையில் வரும் அஷ்டோத்திரத்தையும், அங்க பூஜையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு வேளை சங்கல்பத்திற்கு தேவையான குறிப்புகள் கிடைக்க வில்லையென்றால் சுபதினே, சுபநக்ஷ்த்ரே, சுபதிதௌ, சுப முஹூர்த்தே என்றும் சொல்லியும் செய்யலாம். இந்த பூஜைக்கு துளசி கிடைத்தால் அதைக் கொண்டு செய்தால் மிகவும் நல்லது, கிடைக்காதவர்கள் மற்ற மலர்களைக்கொண்டும் அக்ஷதைக் கொண்டும் செய்யலாம். மறந்து விடாமல் பூஜையை முடித்துவிட்டு கதை படிக்க வேண்டும். முழு கதையை படிக்க நேரமில்லையென்றால் அதன் சுருக்கி எழுதிய சாரத்தையாவது கண்டிப்பாக படிக்க வேண்டும். பின் அந்த பிரசாதத்தை தான் முதலில் உண்டு மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அதே போல் கலத்திலுள்ள தீர்த்தத்தை தாமும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்னமியன்றும் நம்பிக்கையுடன் செய்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
குறிப்பு;- இப்பூஜையைப் பற்றிய முழு விவரங்கள் பல புத்தகங்களில் வருகிறது. உதாரணம் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, ஸ்ரீ சத்ய நாராயண விரத மகிமை போன்ற புத்தகங்கள் பல கடைகளில் கிடைக்கிறது. பிரோகிதர் வைத்து செய்ய நேர மில்லாதவர்கள், இம்மாதிரி புத்தகங்கள் மூலம் தாமே சொந்தமாக பூஜை செய்துக் கொள்ளலாம்.