Tuesday, June 26, 2007

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்

நான் கூறும் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் என்னும் திருதலத்தில் உள்ளது. இத்தலத்தில் தான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார். அவருக்கென இக்கோவிலில் தனி சந்நிதியொன்று உள்ளது. இங்குள்ள பெருமாள் தன் துணைவிகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கலோக கதவை
திறப்பார்கள். ஆனால் இக்கோவிலே பூலோகத்தின் வைகுண்டமாக கருதப்படுவரால் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு இக்கோவிலில் அடி எடுத்து வைத்தாலே சொர்க்க வாசலில் நுழைந்த முழு பலனைப் பெறலாம். இங்குள்ள தாயாரின் பெயர் யதிராஜவல்லி. தாயாருக்கென்று தனி சந்நிதியுள்ளது. அத்தோடு ஆண்டாளுக்கும் தனி சந்நிதி ஒன்று தனியாக உள்ளது. ஆண்டாளின் அழகை வர்னிக்க நம் அகக்கண் கூட பத்தாது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பிறகு ராமருக்கும், வேணுகோபாலருக்கும் தனித்தனி சந்ந்திகள் உள்ளன. இப்பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.


ஸ்தல வரலாறு; இக்காலத்தில் ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை
பார்த்து சிரித்தன. இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சாபமளித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவம் செய்தார்கள். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக, கணங்களுக்கு காட்சி அளித்து , பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார்.
அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.


தோஷம் நீங்கும் ஆலயத்தின் விசேஷம்; ராமானுஜர் என்பவர் ஆதிசேஷனின் மறுபிறவிகளில் ஒன்றாக பிறந்து பெருமாளின் உடனிருந்து, அவறை என்றுமே பிரியாதிருப்பவர். ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். அவரைப் பற்றி கூறிக் கொண்டிருந்தால் ஒரு கட்டுரையே பத்தாது. ஆக ஆதிசேஷணனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.


ராமானுஜரின் சிறப்பாக கொண்டாடப்படும் விஷயங்கள்; நான் குறிப்பிடும் இவையெல்லாமே இக்கோவிலில் வேலை பார்க்கும் ஒருவர் கூறியது; இந்த ஊரில் இறந்த ஒவ்வொருத்தருக்கும் மோட்சம் அடையக்கூடிய பாக்கியம் பெறுவர். எப்படியெனில் சுவாமிக்கு சூட்டப்பட்ட திருமாலையையும், ஆளவந்தார் காஷாயம், பரிவட்டம் ஆகியவையை இறந்தவரின் உடலில் வந்து சாத்துவார்கள். இதனால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென நம்பிக்கை.



ஸ்ரீராமானுஜருக்கு அபிஷேகம் நடக்கும் போது அவருக்கு சாத்திய உடைகள் ஈரமாகி விடும் அல்லவா. ஆகவே அந்த நீரை பிழிந்து தீர்த்தமாக நாம் அருந்தினால் அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.


நப்பிக்கையுடன் செய்தால் பலன் உறுதி.

Wednesday, June 13, 2007

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் 2

(தொடர்ச்சி)

இதன் முன் பாகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகள்;

அர்தநாரீஸ்வரராக உருவான வரலாறு; ஒரு நாள் அம்மன் விளையாட்டாக சிவனின் இரு கண்களையும் பொத்தினாள். இதனால் உலகமே இருண்டு போயிற்று. இச்செயலினால் கோபமடைந்த சிவபெருமான் அம்மனை பூலோகத்தில் சென்று தவம் செய்து தன்னை அடையும் படி கூறினார். கணவரின் சொல்படி பூலோகத்திற்கு சென்று அம்மன் தவம் செய்ய தொடங்கினாள். இந்த கதையை விரிவாக படிக்க இங்கே பார்க்கவும். பிறகு பதிதன்னின் சொல்படி மாங்காட்டிலிருந்து காஞ்சிக்கு அம்மன் புறப்பட்டு சென்றாள். பிறகு காஞ்சியில் சிவனின் உருவத்தை செய்து வேண்டி வந்தாள். இதனால் சிவபெருமான், திருவண்ணாமலைக்கு வந்து தன்னுடைய உடலில் சரிபாதையை பெருமாறு கூறினார். பிறகு அம்மன் திருவண்ணாமலைக்கு சென்று சிவனையெண்ணி தவம் செய்ய தொடங்கினாள். அப்பொழுது அத்தவத்தை கலைக்க மகிடாசூரன் அங்கே வந்தான். இதனால் அம்மன் மகிஷாசுரமர்தினியாக உருவெடுத்து அவனைக் கொன்றாள். அதன்பின்னர் கார்த்திகை மாதம் பௌர்னமி கூடிய சுப தினத்தில் பிரதோஷ வேளையில் ஜோதிரூபமான சிவனை தரிசித்துவிட்டு அம்மன் சிவனின் இடபாகத்தைப் பெற்றாள். அதனால் தான் கார்த்திகை தீபத்தின் போது அர்த்தனாரீஸ்வரர் ரூபமாக எழுந்தருளி சிவனும் அம்பாளுமாக சேர்ந்து எல்லோருக்கும் காட்சி கொடுக்கிறார்.

முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர்; அருணகிரிநாதர் தன் இளமை காலத்தில் வாழ்க்கையை வெருத்து வள்ளாள மகாராஜா கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கு தோன்றி அருணகிரிநாதரை காப்பாற்றி அவருக்கு அருள் புரிந்தார். பின்பு அவர் முருகப்பெருமானின் மீது அளவு கடந்த பக்தி
வைத்து பல பாடல்களை இயற்றினார். இதனால் இவர் மேல் பொறாமை கொண்ட அரசவைப்புலவரான சம்பந்தன் நீ அழைத்தால் உனது முருகன் வருகிறானா அல்லது நான் அழைத்தால் எனது காளி தேவி வருகிறாளா? என்று அகந்தையோடு பேசினான். பிறகு அருணகிரிநாதர் தன் நிலைமையை முருகனிடம் கூறி மன வேதனை அடைந்தார். இதனால் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சி தந்தருளினார். அகந்தையாக பேசியதால் காளி தேவி சம்பந்தனுக்கு காட்சி கொடுக்கவில்லை. இதனால் பெரும் கோபம் கொண்ட சம்பந்தன், அருணகிரிநாதனின் புகழை அழிக்க தக்க சமயத்திற்காக காத்திருந்தார். அதற்கு சமயமாக விஜயநகர் மன்னரான பிரபுவிட தேவராயர் தன்னுடைய கண் பார்வை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை தனக்கு சாதகமாகிக்கொள்ள சம்பந்தன், பிரபுவிட மன்னரைப் பார்த்து தங்களுக்கு கண் பார்வை கிடைக்க ஒரு வழி இருக்கிறது என்றார். அது என்னவென்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரைக் கொண்டு வைத்தியம் செய்தால் இழந்த கண்களை திரும்ப பெற முடியும் என்றும், ஆனால் இதை அருணகிரிநாதரால் தான் கொண்டு வர முடியும் என்றார். இதனால் மன்னரும் அருணகிரிநாதரிடம் தனக்கு இச்செயலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அருணகிரிநாதரும் அதற்கிணங்க தன்னுடைய பூத உடலோடு சொர்க்கத்திற்கு செல்ல முடியாததால் ஒரு இறந்த கிளியிடம் தன் உயிரை வைத்து கூடுவிட்டு கூடு பாய்ந்து சொர்க்கத்திற்கு சென்றார். ஆனால் சம்பந்தரின் சூழ்ச்சியால் அருணகிரினாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.

இதனால் அங்கு அருணகிரிநாதர் கிளிரூபத்திலேயே இருந்து முருகனின் பாடல்களை இயற்றினார். அங்கு கிளி வடிவமாக ஒரு கோபுரத்தில் அருணகிரிநாதர் தங்கியதால் அது கிளி கோபுரம் என்ற பெயரைப் பெற்றது.

வள்ளாள மகாராஜாவின் மகனான பரமசிவன்; வள்ளாள மகாராஜாவிற்கு தன் மேல் மிகவும் கர்வம் கொண்டு அருணாசலேசுவரர், தான் சொன்னால் அனைத்தையும் நிறை வேற்றுவார் என்ற நினைப்போடு வாழ்ந்து வந்தார். இதனால் இவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் அவருக்கு குழந்தையாக பிறந்தார். ஆனால் வள்ளாள மகாராஜா, தாம் எடுத்து அந்த குழந்தையை கொஞ்சும் போது சிவனாக பிறந்த அந்த குழந்தை மறைந்து விட்டது. மனம் கலங்கி சிவனை வந்து மகாராஜா வேண்டினார். இதனால் மகாராஜாவின் தவறை உணர்த்தி அவருக்கு மகனாக பிறந்ததால் தாமே அவருக்கு ஈமக்கிரியைகளை செய்துவிப்பதாக அருணாசலேசுவரர் வாக்களித்தார். இதனால் தான் இன்றும் மாசி மாதத்தில் வள்ளாள மகாராஜாவிற்கு அருணாசலேசுவரர் திதி செய்து வைக்கிறார். இதற்கு மாசி மகம் தீர்த்தவாரி என்று பெயர்.

மற்றொரு சம்பவம்; வள்ளாள மகாராஜா தன் பெயரில் ஒரு கோபுரத்தை கட்டி முடித்து விட்டு தன் பேரில் கர்வம் கொண்டார். இதனால் இவருக்கு புத்தி சொல்ல விரும்பிய சிவபெருமான் பத்து நாட்கள் தொடர்ந்து வரும் திருவிழாவில் ஒன்பது நாளும் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல மறுத்து விட்டார். இதனால் மனம் வருந்தி தன்
தவரை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் திருவிழாவின் கடைசி நாளில் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல சிவபெருமான் அனுமதித்தார்.

ரமண மகரிஷியின் பாதாள லிங்கம்; ஆயிரங்கால் மண்டபத்தில் படிகட்டின் வழியாக கீழே சென்றால் அங்கே நாம் பாதாள லிங்கத்தை பார்க்கலாம். அங்கே தான் ரமண மகரிஷி தன் இளமை காலத்தில் தங்கி சிவனையெண்ணி தவமிருந்தார். அவருக்கு உதவியாக சேஷாத்திரி என்பவர் உடனிருந்தார். மனதில் உள்ள ஆசைகளையும், எண்ணங்களையும் எப்படி அடக்க வேண்டும் என்று எளிமையான முறையில் கூறியது இவரது சிறப்பு. ஒரு எடுத்துக்காட்டாக...... ஒரு பெண் தன் விலையுயர்ந்த நகையை கழுத்தில் அணிந்துக் கொண்டே மற்ற எல்லா
இடங்களிலும் தேடியது, தன் பொருளின் மேல் தான் வைத்த பற்றை பற்றி எல்லோருக்கும் தெரியும் படி செய்தது போன்ற கதையில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

இவையே திருவண்ணாமலை ஸ்தலம் பற்றி நான் அறிந்ததும் கேட்டதும். உங்களுக்கு தெரிந்த வரலாறு கதை இருந்தால் தயவு செய்து கூறவும். நானும் தெரிந்துக் கொள்வேன்.

Wednesday, June 6, 2007

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் 1

இந்த வாரத்தின் கோவில் திருவண்ணாமலையில் இருக்கும் திரு அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.
திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.
இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது. அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம். இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது. மூன்றாவது பிராகரத்தில்
உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது. மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, வினாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.


ஸ்தல வரலாறு; ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள். ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார். யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து
சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை. தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார். அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார். இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ
சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார். அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.


இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகளை அடுத்த பதிவில் பார்க்கலாமா.....

(தொடரும்)

Thursday, May 31, 2007

உன்னாலே உன்னாலே

இந்த படத்தில் வினய் தான் நம்ம கதாநாயகன், சதாவும் தனிஷாவும் கதாநாயகிகள். இந்த படத்தில் எல்லாமே திரும்ப திரும்ப வந்துக் கொண்டே இருக்கும். அதாவது அதே நான்கைந்து முகங்களும், நான்கைந்து வரிகளும் திரும்ப திரும்ப வருகிறது. அதனால் தான் இந்த படத்தின் தலைப்பு கூட இரண்டு முறை வருகிறது. இந்த படத்தில் வித்யாசமாக யாருக்குமே அப்பா
அம்மாவை காட்டவேயில்லை. அதனால் காதலுக்கு எதிர்ப்பு கிடையாது. வினய்க்கு ஒரே ஒரு அக்கா. அக்கா வேடத்தில் நடித்திருப்பது உமா பத்மநாபன். இவங்களும் ஒரு சில காட்சியில் மட்டுமே வந்து போகிறார்கள். படத்தில் வரும் கதையை முக்கால்வாசிக்கு மேல் ஆஸ்திரேலியாவில் தான் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நம்ம கதாநாயகன் பெயர் கார்த்திக்,
கதாநாயகிகளின் பெயர்கள் ஜான்சி (சதா), தீபிகா (தனிஷா). சரி கதையைப் பார்ப்போம். எடுத்த உடனே நம்ம ஜான்சியும், கார்த்திக்கும் சண்டை போட்டுவிட்டு பிரிந்து விடுகிறார்கள். பிறகு அந்த துக்கத்தில் கார்த்திக் ஓரு சோக பாடலை பாடி முடிக்கிறார். பிறகு அவர் முகத்தில் சோகத்தையும் காணும், காதலியை தேடவும் காணும். இது இப்படியிருக்க கார்த்திகிற்கு வேலை விஷயமாக ஒரு ஆறு மாதத்திற்கு ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அங்கு விமான நிலையத்தில் ஒரு பெண்ணிற்கு பொட்டிட்டு, ஆரத்தி எல்லாம் எடுக்கிறார்கள். அந்த பெண் விமானத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தன்னை நாகரீக மங்கையாக அலங்காரம் செய்துக்கொள்கிறாள். அவள் பெயர் தீபிகா. கார்த்திக்கும், தீபிகாவும் பக்கத்து பக்கத்தில் இடம் கிடைக்கிறது. தீபிகா, கார்த்திக்கிடம் பேசி பழகி இருவரும் நண்பர்களாகிறார்கள்.
இருவரும் ஆஸ்திரேலியா வந்து சேருகிறார்கள். தீபிகாவை அழைத்து செல்ல அங்கு ஜான்சி வருகிறாள். ஆகவே கார்த்திக்கை பார்த்ததும் உடனே தீபிகாவை சீக்கிரமாக அழைத்து செல்ல பார்த்தும், கார்த்திக் ஜான்சியை பார்த்து விடுகிறார். பின் கார்த்திக் ஜான்சிசை துரத்தி துரத்தி தேடி பேசிய விஷயங்களையே மறுபடியும் பேசி நிறைய நேரம் கதையில்
போய் விடுகிறது . கார்த்திக் அங்கு ஒரு தமிழ் ஆளை சந்தித்து அவனை நண்பனாக்கிக கொண்ட பிறகு ஜான்சிக்கும் தனக்கும் எப்படி சந்திப்பு உண்டாயிற்று என்று கூற ஆரம்பித்து அவளை காதலித்தது பற்றியும், பிறகு தான் மற்ற பெண்களிடம் சகஜமாக பழகுவதை தவறாக ஏற்றுக் கொண்டு சந்தேகப்பட்டு பிரிந்து போனது வறை கூறி முடிக்கிறார். அதன் பிறகு தீபிகாவும் கார்திக்கும் பழகுவது பற்றி பிடிக்காததால், ஜான்சி தனக்கும் கார்த்திகிற்கும் நடந்த சம்பவங்களை தீபிகாவிடம் கூறுகிறார். இதனால் நண்பனாக நினைத்த கார்த்திக்கை தீபிகா நிஜமாகவே காதலிக்க ஆரம்பிக்கிறார். பிறகு ஆறு நாட்களில் கார்த்திக் தன்னை காதலிக்கறாரா பார்க்கலாம் என்று ஜான்சியிடம் தீபிகா கூறுகிறாள். அதற்காக கார்த்திக்கிடம் நெருக்கமாக பழக ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் ஒரு நாள் கார்திக்கிற்கு கையில் அடி பட்டுவிடுகிறது. அதனால் அவனை மருத்துவமையில் சேர்ப்பதிலிருந்து அவனுக்கு பனிவிடைகள் செய்வது வறை தீபிகா
அவன் கூடவே இருக்கிறாள். ஆனால் இதற்கிடையில் ஜான்சிக்கு உள்ளூர கோபமிருந்தாலும் கார்த்திகை மறைமுகமாக காதலிக்கிறார். ஆனால் தீபிகாவின் அன்பைவிட நமது அன்பு குறைவே என்ற முடிவிற்கு வந்து, தான் கார்திக்கை நமது இஷ்டபடி தான் நடக்க வேண்டும், என்று தாம் நினைத்ததை எண்ணி அந்த ஊரைவிட்டே மறுபடியும் சென்று விடுகிறாள்.
இதற்கிடையில் தீபிகா தனது காதலை கார்த்திக்கிடம் வெளிபடுத்துகிறாள். தன்னை புரிந்துக் கொள்ளாத ஜான்சியை விட தீபிகாவே நல்லவள் என்ற முடிவுக்கு வந்து கார்த்திக் தீபிகாவை திருமணம் செய்துக் கொள்கிறான். இது தான் கதை. இந்த படத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Tuesday, May 22, 2007

மாங்காட்டின் முக்கோவில்கள்

இந்த வாரத்தின் கோவில் மாங்காட்டில் உள்ள முக்கோவில்கள். முதலில் வள்ளீஸ்வரர் சிவன் கோவில். இந்த ஆலயம் மாங்காட்டு காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இத்திருக்கோவிலில் அம்மனே சிவனை வந்து வணங்குவதாக ஐதீகம். அம்மன் சிவனை வந்து வணங்கும் இடத்தை குறிப்பதற்காக அங்கே நந்தியின் முன்னால் அம்மனின் பாதங்களை பதித்திருக்கிறார்கள். இது மிகவும் பழமையானக் கோவிலாகும். ஆனால் இந்த கோவிலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும். எல்லா மக்களும் அம்மன் கோவிலுக்கு மட்டும் சென்று வருவார்கள். இதனால் இந்த கோவில் பிரசித்தி ஆகவில்லை. ஆனால் இங்கே அம்மனே சிவனை வணங்க வருவதால், இந்த சிவனுக்கு சக்தி அதிகம். ஆதிசங்கரர் இந்த கோவில் முன்னேற்றத்திற்கு உதவியிருக்கிறார். இப்பொழுது சிறிது காலமாக ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. தன்னால் இயன்ற அளவிற்கு ஒவ்வொருத்தரும் இந்த கோவிலுக்கு கொடுத்து உதவினால், கோவில் முன்னேற்றத்திற்கு நலமாக இருக்கும்.

அம்மன் கோவிலின் மற்றொரு பக்கத்தில் விஷ்னு ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் பெருமாள் தன் தங்கையான அம்மனின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி கொண்டு வருவதாக ஐதீகம். அதனால் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தன் கையில் நகையுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில், பெருமாள் சந்நிதியின் ஒரு புரத்தில் ஆண்டாள் சந்நிதி தனியாக உள்ளது. மற்றொரு புரத்தில் மகாலக்ஷ்மிக்கு தனி சந்நிதி உள்ளது.

மாங்காடு காமாட்சி அம்மன் ஸ்தல வரலாறை படிக்க இங்கே பார்க்கவும்.

இங்கே அம்மனின் ஆலயத்திற்கு வருபவர்கள், மற்ற கோவில்களுக்கும் சென்று வந்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

ஸ்வர்ண காமாக்ஷி

வேத வேத ரூபிணி என்ற பாட்டை கேட்கவும், படிக்கவும் இங்கே பார்க்கவும்.

Wednesday, May 9, 2007

கர்பரக்ஷாம்பிகை அம்மன்

நான் இன்று கர்பரக்ஷாம்பிகை அம்மன் கோவில் பற்றி எழுதவிருக்கிறேன். இத்திருக்கோவில் திருக்கருகாவூர் என்ற இடத்திலுள்ளது. இந்த கோவில் கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நெய் வாங்கிக் கொடுப்பார்கள். அந்த நெய்யை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தம்பதியிடம் கொடுப்பார்கள். அதை தினமும் 48 நாட்கள் தொடர்ந்து (பெண்களுக்கு 3 நாட்கள் தவிர) இருவரும் சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் அம்மனின் அருளால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். அதே போல கர்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆக தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து விளக்கெண்ணெய் வாங்கித் தர வேண்டும். இதை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தருவார்கள். இதை தினமும் சிறிது எடுத்து அடி வயிற்றில் தடவ வேண்டும். அதே போல வலி எடுக்கும் போது இந்த எண்ணையை தடவிக்கொண்டால் அம்மனின் அருளால் சுக்ப் பிரசவம் ஆகும். கன்னிப் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் சீக்கரம் திருமணம் கைக்கூடும்.


ஸ்தல வரலாறு: நித்துருவர் முனிவருக்கும் வேதிகாவிற்கும் குழந்தை நீண்ட நாளாக பிறக்காத்தினால் சிவனையும், அம்பாளையும் வேண்டி பூஜை செய்து வந்தார்கள். இதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அப்பொழுது ஒரு நாள் தன்னையும் மறந்து, தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை நினைத்து வேதிகா கனவு கண்டுகொண்டிருந்தாள். முனிவரும் அப்பொழுது வெளியில் சென்று விட்டார். இந்த நேரம் பார்த்து தர்ச்செயலாக அங்கு உர்த்தவ முனிவர் வந்து சேர்ந்தார். அவர் வந்ததைக் கூட வேதிகா கவனிக்காதலால் வெகு கோவம் கொண்டு, நீ நினைத்து கொண்டிருப்பது எதுவானாலும் உன்னை விட்டு பிரிந்து போக என்று சபித்தார். இதனால் இவள் வயிற்றிலிருக்கும் சிசு தன்னுடைய கர்ப்பபையிலிருந்து நகர்ந்து சென்றது. இதனால் வலி தாங்க முடியாமல் அம்பாளை வேண்டினாள், இதனால் அம்பாள் கர்ப்பரக்ஷாம்பிகையாக அவதரித்து அந்த சிசுவை ஒரு பானையில் வைத்து, பாதுகாத்து வந்தாள். பிறகு பத்து மாதம் முடிந்ததும் அந்த பானையிலிருந்து ஒரு அழகான ஆண் குழந்தையை வேதிகாவிடம் ஒப்படைத்தாள். அதனால் வேதிகா, அம்மனிடம் இந்த இடத்திலேயே இருந்து எல்லா கர்பிணி பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதனால் தான் அம்மன் கர்பரக்ஷாம்பிகையாக இங்கிருந்து இன்றைக்கும் எல்லோரையும் காத்து வருகிறாள்.


இங்கிருக்கும் சிவனின் பெயர் முல்லைவன நாதர். இந்த சிவலிங்கம் ஸ்வயம்புவாக அதாவது தானாகவே உருவானது. இதனால் சிவனுக்கு தண்ணீர் விட்டு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால் புனுகு சாத்தி சிவலிங்கத்தை வைத்திருப்பார்கள். குணமாகாத வியாதி உள்ளவர்களும் இங்கு வந்து சிவனுக்கு புனுகு சட்டம் சாத்தி சிவனை வழிப்படுவார்கள். இதனால் வியாதி குணமாகி நலமடைவார்கள்.

சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட ஹரிதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்

ஹமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷிணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணிபவேது



Wednesday, May 2, 2007

செண்பகவல்லி அம்மன்




நான் இன்று செண்பகவல்லி அம்மன் கோவிலைப் பற்றி எழுதப்போகிறேன். இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கோவில்மேடு என்னும் இடத்தில் காந்தி மைதானத்திற்கு பின்புரத்தில் உள்ளது. இந்த கோவிலை செண்பகராஜா என்னும் அரசர் கட்டியுள்ளார். இது மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் இருக்கும் சிவனின் பெயர் பூவனநாதசுவாமி. இங்கிருக்கும் அம்மனின் சிலை வடிவம் சுமார் ஏழு அடி உயரம் இருக்கும். அம்மனை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். அம்மனுக்கும் சிவனுக்கும் தனித்தனி பிரகாரங்கள் உள்ளது. இங்கிருக்கம் அம்மனுக்கு சக்தி அதிகம். அம்மனின் அருளால் அங்கு எல்லோருமே சுபிக்ஷமாக இருக்கிறார்கள். இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு, நவராத்திரி, வருஷப்பிறப்பு போன்ற விசேஷங்கள் விமர்சையாக கொண்டாடப்படும். அதுமட்டுமில்லாது, மார்கழி மாதம் முழுவதுமே அம்பாளுக்கு விசேஷமாக கொண்டாடப்படும். உங்களுக்கு இக்கோவில் பற்றி தெரிந்த மற்ற விஷயங்களையும் நாம் பரிமாரிக்கொள்ளலாம்.

Thursday, April 26, 2007

கற்பூர நாயகியே கனகவல்லி

கற்பூர நாயகியே கனகவல்லி பாடலைப் பார்க்க ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் சொடுக்கவும்.

Tuesday, April 24, 2007

சோம்னாத்பூர்






















 நான் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள சோம்னாத்பூர் என்னும் இடத்தில் இருக்கும் கேசவ கோவிலைப் பற்றி உங்களிடம் எண் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கோவிலானது ஹொய்சால ராஜா நரசிம்மா3 (1254-1291 A.D.) வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலை கட்டியது சோம்னாத் என்னும் படைத் தளபதி. அவன் இக்கோவிலை காவிரி நதிக்கரையில் அமைத்திருக்கிறான். இவன் இந்த கோவிலை கட்ட பணவுதவியும், உத்தரவும் அந்நாட்டு மன்னனிடம் கேட்டு பெற்று, பின் இருப்பதிலேயே மிகவும் திறமை வாய்ந்த ஹொய்சாலா சிற்பிகளை கொண்டு இந்த கோவிலை கட்டி முடித்தான். இந்த கோவிலை செய்த சிற்பிகளின் பெயர் மல்லிதம்மா, மாசானத்தம்மா, சாமேயா, பாமேயா, மற்றும் பலர். மல்லிதம்மா என்னும் சிறப்புவாய்ந்த சிற்பி இருப்பதிலேயே அதிகமான சிற்பங்களை செதுக்கியுள்ளார். அந்தந்த சிற்பங்களுக்கு கீழே அதை உருவாக்கிய சிற்பிகள் தங்கள் பெயரை செதுக்கியுள்ளார்கள்.




இந்த கோவிலின் அமைப்பு, கோபுர வாசலை கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்து அதற்கு கீழ் 64 முக்குகள் வைத்து அதில் ஒவ்வொரு இடத்திலும் புராண கதை கொண்ட சிற்பங்களை வடித்துள்ளர்கள். இந்த கோவிலில் வேணுகோபாலர், கேசவர், ஜனார்த்தனர் ஆகியோரின் கர்ப்பகிரகங்கள் உள்ளன. தூண்களிலும், மேற்கூறையிலும் அழகாக வடிவங்களை சிற்பிகள் செதுக்கியுள்ளார்கள். அவை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆக கோபுரதிற்கு உட்புரத்திலும், வெளிபுரத்திலும் சிற்பங்களாக நிறைந்து அந்த இடமே பார்க்க சொர்கலோமாக தோன்றும்.

இந்த கோவிலை நிறைய படத்தில் காட்சிகளாக பார்க்கலாம் (குறிப்பாக அருணாசலம் படத்தில் அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்ட என்ற பாட்டில் பார்க்கலாம்). இந்த கோவிலை நேரில் பார்த்து ரசித்தால் தான் மனதில் ஆழமாக பதியும். எல்லோரும் இந்த கோவிலில் உள்ள சிற்பங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த கோவிலைப் பற்றி கூற விரும்பினேன்.










Wednesday, April 18, 2007

அந்த அழகிய மாநகர் மதுரையிலே

என்னுடைய பங்களிப்பு இங்கே உள்ளது.

அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக

இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா

இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

Monday, April 16, 2007

அழகுக்கு அழகு

கடலுக்கு அலை அழகு, அந்த
அலைகளின் ஓசை கேட்பதிற்கு அழகு

குழந்தையின் பிஞ்சு கால்கள் அழகு, அந்த
காலில் சிணுங்கும் தங்ககொலுசு கூடுதல் அழகு

பெண்ணிற்கு தாய்மை அழகு, அந்த
தாய்மைக்கு தன் பிள்ளையின் புத்திசாலிதனம் அழகு

ஆணுக்கு வீரம் அழகு, அந்த
வீரத்திற்கு விவேகமும் சேர்ந்தால் தான் அழகு

கிளிக்கு பச்சை நிறம் அழகு, அந்த
பச்சை நிறத்தில் சுட்டியிழுக்கும் பட்டுப் புடவைகள் அழகு

கடலுக்குள் முத்து அழகு, அந்த
முத்துகள் சேர்ந்து மாலையானால் கழுத்திற்கு அழகு

சூரியன் அதிகாலையில் விடிவது அழகு, அந்த
விடியலுக்காக காத்திருக்கும் விவசாயிகள் உழைப்பு அழகு

வி எஸ் கே அய்யாவிற்கு கவிதை அழகு, அந்த
கவிதைக்குள் பொதிந்திருக்கும் உண்மைகள் அழகு

என்னை அழகு சுற்றுக்கு அழைத்த திரு வி எஸ் கே அய்யாவிற்கு எனது நன்றி.

பதிலுக்கு நான் அழைக்கும் நபர்கள்

துளசி கோபால்
முத்துலெட்சுமி
கண்ணபிரான் ரவிசங்கர்
சத்யா
சிறில் அலெக்ஸ்

Friday, April 13, 2007

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்




நான் இன்று கருங்குளம் வெங்கடாசலபதி கோவில் பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் கூறுகிறேன். இத்திருக்கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் போகும் வழியில் இத்திருத்தலம் உள்ளது. இந்தக் கோவில் கருங்குளம் மலை மேல் உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், இரண்டு சந்தன கட்டைகளாக நமக்கு காட்சியளிக்கிறார். இதற்கு ஒரு புராணக் கதை உள்ளது. அதைப் பற்றி பின் கூறுகிறேன். இந்தக் கோவிலில் மற்ற முக்கியமான விசேஷம் என்னவென்றால், இங்கு உறங்கா புளி மரமும், ஊறா கிணரும் உள்ளது. அதாவது இந்த புளிமரத்தில் என்றுமே புளியம்பூ புளியங்காயாக மாறாது அதுமட்டுமில்லாமல் இந்த மரம் என்றுமே உறங்காமல் இருக்கும், அதேபோல இந்த கிணற்றில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருக்கும் அதனால் புதிதாக தண்ணீர் என்றுமே ஊற்றெடுக்காது. இந்த கோவிலில் சித்திரா பௌர்னமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
புராணக் கதை:
ஒரு காலத்தில் சுபகந்தன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் நெறி தவறாமல் அந்நாட்டு மக்களிடம் மிகவும் பிரியமாக பழகி வந்தான். அதனால் எல்லோரும் அவனிடம் அன்பாக பழகி வந்தார்கள். ஆனால் சில காலத்திற்கு பிறகு அவனுக்கு புற்று நோய் வர ஆரம்பித்தது. எந்த வைத்தியர்களாலும் அவனை குணப்படுத்த முடியவில்லை. புற்று நோய் அவன் உடம்பு முழுவதும் படற ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் மிகவும் தவித்தான். பின் திக்கற்றவர்களுக்கு தெய்வமே கதி என்று திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று, அங்கு தங்கி இறைவனை நினைத்து முழுமனதுடன் பிரார்த்தித்தான். இதனால் பெருமாள் மகிழ்ந்து அவனது கனவில் தோன்றி, உன் நோய் குணமாக வேண்டுமென்றால் எனக்கு சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்ததில் இரண்டு கட்டைகள் மிஞ்சும், அதை கருங்குளம் மலையில் வந்து வைத்து விடு, அந்த கட்டைகளில் நான் என்றும் வசிப்பேன் என்றார். இப்படி செய்தால் உன் நோய் கண்டிப்பாக குணமாகும் என்றார். இதனால் அந்த அரசனும் மகிழ்ந்து பெருமாள் சொன்னது போலவே சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்து பின் மிஞ்சியதை கொண்டு வந்து உறங்கா புளிமரம் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தான். இதனால் அவனுடைய நோய் நீங்கியது. ஆகவே இந்த பெருமாளை முழுமனதுடன் வணங்கினால், நோய்கள் தீர்ந்து நலமாக வாழலாம். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

Monday, April 9, 2007

நாய்கள் ஜாக்கிரதை

பங்களூரில் நாய்களின் கொண்டாட்டம் மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனக்கு தெரிந்தே "கோரமங்கலா" என்னும் இடத்தில் நாய்கள் தெருவில் வரும் வண்டிகளை துரத்தும். இப்பொழுது அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒரு குழந்தையை பல நாய்கள் சேர்த்து கடித்து கொன்றுவிட்டது என்ற செய்தியை கேட்டதிலிருந்து மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பாவம் அந்த குழந்தை எவ்வளவு துடித்திருக்கும். அந்த குழந்தையின் தாய் தந்தைக்கு எவ்வளவு மனக்கஷ்டம். மற்றொரு குழந்தையையும் நாய்கள் கடித்திருக்கிறது. அந்த குழந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். அது மட்டுமிலாமல் பல பேருக்கு நாய்களினால் வண்டியிலிருந்து விழுந்து கைகால் ஒடிந்து போயிருக்கிறது. இந்த நாய்கள் கண்டதையும் தின்று, அதன் புத்தி பேதலித்து போயிற்று. இதற்கு அரசாங்கம் தான் சீக்கிரம் ஒரு நல்ல முடிவுவாக எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

இதை "The Hindu" செய்தித் தாளில் படித்தேன்.

Saturday, April 7, 2007

test


வியர்டு கவிதை

நான் இன்று வழக்கம் போல் என் மின்னஞ்சலை பார்க்க தொடங்கினேன். எஸ் கே அய்யா ஒரு மடல் அனுப்பியிருந்தார். பார்த்தால் இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே பங்கேற்றிருந்தாலும் நான் அழைத்ததிற்காக, மறுபடியும் வியர்டு விளையாட்டிற்கு ஒரு கவிதையே பதிவிட்டுள்ளார். கட்டாயம் பாருங்கள்.

Tuesday, April 3, 2007

ரவா லட்டு

தேவையான சாமான்கள்:

ரவை 1 ஆழாக்கு
சர்க்கரை 1 ஆழாக்கு (கொஞ்சம் தித்திப்பு தூக்கலாக வேண்டுமானால் ஒன்றரை ஆழாக்கு போட்டுக் கொள்ளலாம்)
முந்திரி பருப்பு 7-8 வரை சேர்க்கலாம்
கொஞ்சம் ஏலக்காய் தூள்
கொஞ்சம் நெய்

ரவையை முதலில் சிறிது நெய் சேர்த்து பொன்னிறமாக வருத்துக் கொள்ளவும். பின்பு வருத்த ரவையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் மேற்சொன்ன அளவு சர்க்கரையை தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதற்கு பிறகு இரண்டையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின் முந்திரிபருப்பை வருக்காமல் பச்சையாகவே பொடிபொடியாக உடைத்துக் கொண்டு, அதையும் அந்த கலவையோடு சேர்த்துக் கொள்ளவும். பின் கொஞ்சம் ஏலக்காய் தூளையும் சேர்த்த பிறகு 3 முதல் 4 சிறு கரண்டி நெய் சேர்த்து லட்டு மாதிரி பிடிக்கவும்.

Sunday, March 25, 2007

வித்தியாசமான (weird) குணங்கள்

வணக்கம்,

என்னுடைய வித்தியாசமான ஐந்து குணங்களை திருமதி முத்துலெட்சுமி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். நானே இப்பொழுது தான் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். என்னைப் பற்றி சிந்திக்க வைத்ததிற்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

1. என் மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்து கொண்டே இருப்பேன். குறிப்பாக நான் எனக்குள்ளே ஒரு தனி வாழ்க்கை வாழ்வேன். இதனால் சில சமயத்தில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே கவனிக்காமல் இருப்பேன். பிறகு மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்றே எனக்கு தெரியாமல் போய்விடுகிறது. குறிப்பாக பயணம் செய்யும் நேரங்களில் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது எனக்கு வழக்கமாக போயிற்று. இதனால் நான் வெளியில் வேடிக்கை பார்த்தும் என் மனதில் எதுவும் பதியாமல் போய்விடுகிறது.

2. குழந்தை மாதிரி சண்டைப் போடுவது. சில நேரத்தில் நான் குழந்தைப் போல சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டு சண்டைப் போடுவேன். பிறகு தான் தெரியும் அவர்கள் வேறு அர்த்தத்தில் சொல்கிறார்கள், நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டு விட்டோம் என்று. அதற்காக நாள் முழுவதும் வருத்தப் படுவேன். எதற்கு இந்த சின்ன பிள்ளைத்தனமோ எனக்கு தெரியவில்லை.

3. எதையும் பார்த்தால் முதலில் எந்த விஷயம் அதில் இல்லை என்று தான் பார்ப்பேன். இதனால் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் என்றே தோன்றாது. குறிப்பாக ஏதாவது ஒரு புது இடத்திற்கு சென்றால் எல்லோரும் அங்கிருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி பாராட்டுவார்கள். ஆனால் நான் மட்டும் எது இந்த இடத்தில் இல்லை என்று பார்ப்பேன்.

4. நானாக யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். ஆனால் அவர்களே வந்து உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பேன். இதனால் சிலபேர் வேலை விஷயத்தில் கண்டு கொள்ளவே மாட்டார்கள். கடைசியில் நானே எல்லா வேலைகளையும் செய்யும் படி ஆகிவிடும். இதனால் யாருக்கு லாபம் என்று சொல்லுங்கள்?

5. முன்பெல்லாம் தனக்கு தெரியாத இல்லை சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடவே மாட்டேன். இதனால் வீட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியாது. நான் உண்டு, என் வேலை உண்டு என்றிருப்பேன். ஆனால் இதனால் நிறைய விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போயிற்று. உதாரணமாக அம்மா, அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தேன். பிறகு தான் இது தவறான விஷயம் என்று தெரிந்துக் கொண்டு திருத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

இவர்களை நான் அழைக்கிறேன்

மு.கார்த்திகேயன்
எஸ் கே அய்யா
சிறில் அலெக்ஸ்
எஸ்பி விஆர் சுப்பையா
வடுவூர் குமார்